அழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of india
ரயில் பயணங்கள் என்றாலே பலருக்கு மறக்க முடியா அனுபவங்களை மனதில் பதித்து விடும். அதிலும், சில வழித்தடங்கள் காணற்கரிய இயற்கையின் எழிலோடு இயைந்து செல்லும். அதுபோன்று இந்திய ரயில்வே வழித்தடங்கள் சிலவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். ரசித்து எடுக்கப்பட்ட ரயில் வழித் தடங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
1. ஜம்மு-உதம்பூர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாலை, ரயில்வே என எந்தவொரு கட்டுமான திட்டங்களையும் செயல்படுத்துவது பொறியியல் துறைக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அதன் நில அமைப்பு அப்படி. இந்த நிலையில், உலகின் அழகான பள்ளத்தாக்கு பகுதியாக புகழப்பெறும் காஷ்மீரில் ஜம்மு-உதம்பூர் இடையிலான 53 கிமீ தூரம் கொண்ட ரயில்வே பாதையும் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
2. ஜம்மு-காஸிகுண்ட்

ஜம்மு-காஸிகுண்ட் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இயக்கப்படும் போது அது நிச்சயம் சுற்றுலாப் பயணிகளை புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. குளிர்காலங்களில் முழுவதும் எங்கு காணினும் வெண் போர்வையாக பரந்து கிடக்கும் பனிப் படலங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம்.
3. பதான்கோட்-ஜோகிந்தர்நகர்

இமாச்சலப் பிரதேசம் கங்ரா பள்ளாத்தாக்கு பகுதியில் உள்ள ஜோகிந்தர் நகரையும், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டையும் இணைக்கும் 165கிமீ தூரம் கொண்ட இந்த ரயில் வழித்தடம் கணவாய்கள், சுரங்கப் பாதைகள், ஆறுகள் என ஓர் இயற்கை அழகில் குளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
4. ரத்னகிரி-மங்களூர்

வியக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்துக் கொண்டே செல்வதற்கான மற்றொரு வழித்தடம் ரத்னகிரி-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம். கொங்கன் ரயில் மண்டலத்தில் இருக்கும் இந்த ரயில் வழித்தடம் ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்ப்பகுதிகளை கடந்து சென்று நம் கண்களையும், மனதையும் ஈரப்படுத்தும்.
5. வாஸ்கோடகாமா-லோண்டா

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் கோவாவின் வாஸ்கோடகாமா மற்றும் லோண்டா சந்திப்புக்கு இடையிலான இந்த வழித்தடம் நிச்சயம் ஒரு முறை செல்ல வேண்டிய ரயில் பயணமாக இருக்கும். ஆர்ப்பரித்து விழும் அருவிகள், அடர்ந்த வனம் என ஒரு த்ரில் பயண அனுபவத்தை வழங்கும்.
6. ஊட்டி மலை

ரயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை அளித்து வரும் ஊட்டி மலை ரயில் தனது பயணத்தின் மூலம் லட்சோபலட்சம் மக்களின் கண்களுக்கு நித்தமும் விருந்தளித்து வருகிறது. தென் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்கு உண்டு.
7. கல்கா-சிம்லா மலை ரயில்

ஊட்டி மலை ரயில் போன்றே கல்கா-சிம்லா இடையிலான மலை ரயிலும் வட இந்திய சுற்றுலா செல்வோரை கவர்ந்த ஒன்று. கல்லூரியின் கல்விச் சுற்றுலாவின்போது இந்த ரயிலில் பயணித்த அனுபவம் மனதில் பசுமையாய் நிலைத்திருக்கிறது. அன்று ரயில் பயணத்தின்போது பெய்த பனிக் கட்டி மழையும், அந்த நடுங்க வைத்த குளிரும், அதள பாதாளத்திலிருந்து எழுந்த கோபுரத்தில் கட்டிய பாலத்தில் யூ டர்ன் போட்டு செல்லும் ரயிலின் அழகை கண்டு சிலிர்த்த அனுபவம் இன்று நினைத்தாலும் மனதில் ஜிலீரென்று இருக்கிறது. ஹனிமூன் ஸ்பெஷல் என்றும் இந்த ரயிலை கூறலாம். 1903ல் கட்டப்பட்ட இந்த மலை ரயில் பாதையில் 102 குகைகளும், 864 பாலங்களும் இருக்கின்றன. அதில், சில பாலங்கள் ரோமானிய கட்டிடக் கலையை அடிப்படையாக கொண்டது.
8. ஜல்பைகுரி-டார்ஜிலிங்

ஊட்டி மலை ரயில் போன்றே இதுவும் இந்தியாவின் பழமையான மலை ரயில். முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் டார்ஜிலிங் செல்லும் பயணிகள் இந்த ரயிலில் செல்லும்போது புதிய பரவத்தை அடைவது உறுதி.
9. நேரல்-மாதேரேன் மலை ரயில்

மஹாராஷ்டிராவில், மாதேரேன் மலை ரயிலும் மிக பழமையான மலை ரயில்களில் ஒன்றுதான். எப்போதும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் மும்பைவாசிகளுக்கு ரிலாக்ஸ் தேவையென்றால் மாதேரேனுக்கு இந்த ரயிலில் செல்வது வழக்கம். 1901ல் துவங்கி 1907ல் 20 கிமீ தூரத்துக்கு நேரல்-மாதேரேன் இடையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்துல் ஹூசேன் அடம்ஜி பீர்பாயால் ரூ.16 லட்சம் செலவில் இந்த குறுகிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது.
10. சிலிகுரி-அலிபுர்துவார்

சிக்கிம்-பூடானை இணைக்கும் சிலிகுரி-அலுபுர்துவார் இடையிலான ரயில் பாதையும் பயணம் செய்ய வேண்டிய இந்திய ரயில் தடங்களில் ஒன்று. சரணாலயங்கள், அடர்ந்த வனப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்களை கடந்து செல்லும் இந்த ரயில் பாதையும் பலருக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
11. கவுகாத்தி-சில்சார்

அசாமின் ஹப்லாங் பள்ளத்தாக்கை கடக்கும் கவுகாத்தி-சில்ச்சார் ரயில் பாதையும் இயற்கை அழகை ரசிப்பதற்கான ஏற்ற வழித்தடம். சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் என பசுமை தாயகமாக திகழ்கிறது.
12. ஜெய்ப்பூர்-ஜெய்சால்மர்

ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகர் ஒட்டக சவாரிக்கு பெயர் போனது. ஜெய்சால்மருக்கும், ஜெய்ப்பூருக்கும் இடையில் இருக்கும் ரயில் வழித்தடம் தார் பாலை வனத்தை கடந்து வருகிறது.
13. விசாகப்பட்டினம்-அரக்கு

இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கப்புரியாக திகழும் சட்டீஸ்கரில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கையும், ஆந்திராவின் கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தட பயணமும் நிச்சயம் கண்களுக்கு விருந்தாக அமையும்.
14. ஹாசன்-மங்களூர்

கர்நாடக மாநிலம், ஹாசன்-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடமும் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தும். வயல் வெளிகள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்கப்பட்டுள்ள 57 குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கடந்து செல்கிறது.
15. பாம்பன் ரயில் பாலம்

பொறியியல் துறையின் வலிமைக்கு சான்றாக திகழும் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலமும் பயணத்தின்போது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். ராமேஸ்வரம் தீவை இணைக்கும் இந்த பாலம்தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடல் வழி ரயில் பாதை.
16. கொல்லம்-செங்கோட்டை

1907ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் முதல் ரயிலை திருவாங்கூர் மஹாராஜா துவங்கி வைத்தார். இயற்கை எழில் சூழ்ந்த வழித்தடங்களில் ஒன்று.
What's Your Reaction?






