எப்ப பார்த்தாலும் ஒரே பதட்டமா, மனசுக்குள்ள ஏதோ ஒன்னு அழுத்துற மாதிரியே இருக்கா? இந்த 7 டெக்னிக் யூஸ் பண்ணுங்க
எப்பவுமே ஒரு மாதிரி மனசு படபடனு பதட்டமாவே இருக்கா? மனசு பாரமா இருக்கா? உடம்புல வர்ற பல பெரிய பெரிய நோய்களுக்கு கூட இந்த மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம்னு சொல்லப்படுது. Stress Management னு தனியே கோர்ஸ் போற அளவுக்கு மக்களுக்கு மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. அதற்கு தனிப்பட்ட காரண்ங்கள், சூழல், குடும்பம், சமூகக் காரணங்கள்னு நிறைய இருக்கு. இதிலிருந்து எப்படி வெளில வர்றதுனு தெரியலையா? கவலைப்படாதீங்க. இந்த சின்ன சின்ன அறிவியல்ரீதியான டெக்னிக்கை யூஸ் பண்ணுங்க. மனசு ரிலாக்ஸ் ஆகிடும். வாங்க அந்த டெக்னிக் என்னனு பார்க்கலாம்.
1. பதட்டமும் தடுமாற்றம் வர காரணம் என்ன?

மன அழுத்தம், ஸ்டிரஸ்ங்கிற வார்த்தை ஒரு காலத்தில் மிகப்பெரிய வார்த்தை. அது கிட்டதட்ட ஒருவித மனநோயாகவே கருதப்பட்டது. ஆனால் இந்த ஜெட் வேக வாழ்க்கை முறையில் ஸ்கூல் போற சின்ன குழந்தைல இருந்து வயசானவங்க வரைக்கும் ரொம்ப சாதாரணமா சொ்லற வார்த்தையா மாறிடுச்சு. நிறைய பேர் அதன் அர்த்தமே தெரியாம சொல்றாங்க. ஆனால் பலரும் அதை அனுபவிச்சிகிட்டு வெளில சொல்ல முடியாமலே இருக்காங்க. அவங்க எப்படி அதிலிருந்து மீள்றதுங்கிறதுக்கு தான் இந்த பதிவு.
முன்பெல்லாம் தடுமாற்றம், நடுக்கம், பதட்டம் வந்தால் அது நரம்பியல் சார்ந்த காரணம் என்று சொல்லிக் கடந்து விடுவோம். ஆனால் அதற்கு அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நீங்கள் மனதில் ஏதேனும் அழுத்தத்துடன் இருக்கும்போது உங்களுடைய மூளை உங்கள் உடலுக்கு ஒரு சிக்னலை அனுப்பும். அந்த சிக்னல் உங்களை பதட்டமாகவும் வேகமாகவும் செயல்படத் தூண்டி பரபரப்பாக எதையாவது செய்ய வைக்கும்.
அந்த சமயத்தில் தான் யாரிடமாவது சண்டை போடுவது, மற்றவர்கள் மேல் காரணம் இல்லாமல் கோப்பபடுவது ஆகியவற்றை செய்கிறோம். அதைக் கடந்து போவது கடினமாகி அதன் விளைவுகளிலேயே சிக்கிக் கொள்கிறோம்.
2. புரிந்து கொண்டாலே வெற்றி தான்:
இந்த சமயத்தில், இந்த குறிப்பிட்ட சூழலில் தான் நம்முடைய மனம் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறது என்கிற உங்களை, உங்கள் மனதை trigger செய்கிற புள்ளியை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும். அதுவே உங்களுக்குக் கிடைத்த பாதி வெற்றி.
பதட்டப்படுவதே தவறு என்று அர்த்தமல்ல, அதற்காக நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டிய அவசியமும் இல்லை. அதை புரிந்து கொண்டாலே போதும். உங்கள் பதட்டத்தில் இருந்து வெளிவர முடியும்.
3. மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்;

உடல், மனம் இரண்டையும் ஒருங்கிணைக்கும் வேலையை மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம் ஆகியவை செய்யும். அதனால் நீங்கள் எப்போதெல்லாம் உங்களுக்கு மனச்சோர்வு, பதட்டமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அப்போது அமைதியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அமர்ந்து சில நிமிடங்கள் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள். உடனடி மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
4. உடற்பயிற்சி:

உடற்பயிற்சி உங்கள் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் ஒரு அற்புத வழி. முழு கவனமும் உங்கள் உடல் மீதும் நீங்கள் செய்யும் பயிற்சி மீதும் குவியும்போது தானாக உங்கள் மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த விஷயத்தில் இருந்து இலகுவாக விடுபட முடியும்.
அதேசமயம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். நடைப்பயிற்சி போன்ற கார்டியோ பயிற்சியோடு சேர்த்து மன அழுத்தம் இருக்கும்போது ஸ்டிரென்த் டிரெயினிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் தசை வளர்ச்சியும் அதிகரிக்கும். மனமும் லேசாகும்.
5. மனதுக்கு பிடித்த விஷயம்:

உங்களுக்கு மனசு எப்போதெல்லாம் சரியில்லை, மன அழுத்தமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அப்போது உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள்.
தனியாக பிடித்த இடத்துக்கு பயணம் செல்லுங்கள், இசை கேளுங்கள், நடனம் ஆடுங்கள், புத்தகங்கள் வாசியுங்கள் அல்லது மிகவும் பிடித்த உணவை சாப்பிடுங்கள் (அளவோடு). இவை அனைத்துமே உங்கள் மனதை அழுத்தும் புள்ளியில் இருந்து உங்களை நகர்த்தி வேறு நினைவுகளுக்கு கூட்டிச் செல்லும்.
6. பாசிடிவிட்டி - நேர்மறை சிந்தனை:

நேர்மறை சிந்தனை மிக மிக அவசியம். நம்முடைய மனதுக்கு இந்த பூலோகத்துடன் இணைக்கும் சில சக்தி இருக்கிறது. உங்கள் எண்ணங்களை நோக்கி உங்கள் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும். அதனால் தான் எதிர்மறை எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
இந்த உலகம் நீங்கள் உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்காகத் தான் படைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணமே உங்களை நகர்த்திக் கொண்டு போகும்.
7. ஆழ்ந்த தூக்கம்:

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட மனதை அமைதிப்படுத்த, நரம்பு மண்டலத்தை அமைதியாக வைக்க, பதட்டத்தைக் குறைக்க மிகச்சிறந்த தீர்வு தூக்கம்.
இது உங்கள் உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் ஹீலிங் செய்யும் மருந்து. மனசு அழுத்தமாக, பாரமாக இருக்கிறதா அந்த சமயத்தில் தூக்கம் வரவில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கி பாருங்கள். மனசு உங்கள் கவலையை மறந்து போயிருக்கும்.
8. இறுதியாக,
மேலே குறிப்பிட்ட டெக்னிக்குகள் அறிவியல் ரீதியாக உளவியலாளர்களால் அறிவுறுத்தப்படும் உத்திகள் தான். ஆரம்ப நிலை மன அழுத்தங்களுக்கு இந்த வழிகளைப் பின்பற்றுங்கள். நீண்ட நாள் மனம் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
What's Your Reaction?






