கல்வி கடன் பெறுவது எப்படி?

பிளஸ் டூ தேர்வு முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கலாம். அந்த மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி என்கிற விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இவற்றை விரிவாக பார்ப்போம்...

May 30, 2025 - 14:54
 0  1

1. உயர்கல்வி

உயர்கல்வி

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் உயர்கல்வி படிப்பதற்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.


2. எந்தெந்தப் படிப்புகளுக்கு கல்விக்கடன் கிடைக்கும்..

ல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக் கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ போன்ற படிப்புகளில் சேருபவர்களும் ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்சி, எக்ஸ்எல்ஆர்ஐ, நிப்ட், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங், ஷிப்பிங் போன்ற பட்ட மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்களும் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியும். சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.

இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் தங்களது படிப்புச் செலவுகளுக்காக வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம்.

பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா? பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும். அதாவது, பத்தாம் வகுப்பு படித்து விட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தனித்திட்டம் உள்ளது. இந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி சலுகை மட்டும் கிடைக்காது.

3. தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

*கல்லூரி போனஃபைட் சான்றிதழ்.

*கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.

* பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.

* இருப்பிடச் சான்றிதழ்.

* பள்ளி மாற்று சான்றிதழ்.

* 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

4. கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

கல்விக் கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜக்ட், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்குக் கல்விக் கடன் பெறலாம். வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக் கடன் பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படியே கல்விக் கடன் பெற முடியும்.

5. முன் பணம் செலுத்த வேண்டுமா?

ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவீதமும் வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் கடன் தொகையில் 15 சதவீதமும் முன்பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.

6. உத்தரவாதம் அளிக்க வேண்டுமா?

ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீனோ, உத்தரவாதமோ தேவையில்லை. ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கினால் மூன்றாம் நபர் ஜாமீன் தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற்றால், சொத்து உத்தரவாதம் தேவைப்படும். அனைத்துக் கடன் ஆவணங்களிலும் மாணவருடன் பெற்றோர் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட வேண்டியதிருக்கும்.

7. வட்டி எவ்வளவு?

பேஸ் ரேட்' அடிப்படையில் வங்கிகள் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம் வேறுபடும். சுமார் 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வரை வட்டி இருக்கும். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும் வரை வட்டியை செலுத்த இயலாது என்பது குறித்து மாணவர்களே வங்கிகளிடம் எழுதிக் கொடுத்து விடலாம்.

8. எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்?

எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்?

படிப்பை முடித்த ஓராண்டிலிருந்து அல்லது வேலைக்குப் போய் 6 மாதங்களிலிருந்து கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வாங்குபவர்கள், பத்து ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெறுபவர்கள் 15 ஆண்டுகளுக்குள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

9. ஒரே குடும்பத்தில் பலருக்கு கிடைக்குமா?

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்தாலும்கூட, அவர்கள் அனைவரும் படிக்க வங்கிகளில் கல்விக் கடன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒரு மாணவர் கல்விக் கடன் வாங்கினாலும் கூட, அந்த மாணவரின் சகோதர, சகோதரிகள் படிக்க வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தடையில்லை. கல்விக் கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. மாணவர் மைனராக இருந்தால் பெற்றோர்கள் உறுதியளிக்க வேண்டும். அந்த மாணவர்கள் கல்விக் கடன் வட்டி சலுகை பெற தகுதி பெற்றிருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தச் சலுகை கிடைக்கும். அதற்குத் தடை எதுவும் இல்லை.

10. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கடன் கிடைக்குமா?

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கல்விக் கடன் வழங்குவதற்கான விதி. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக சேரும் மாணவர்கள், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற முடியாது. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்களும் அரசு ஓதுக்கீட்டின் கீழ் தாங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும். அதனால், அரசு நடத்தும் கவுன்சலிங்கில் பங்கேற்று கிடைக்கின்ற கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு, தாங்கள் விரும்பும் கல்லூரியில் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்காததைக் காரணம் காட்டி, அந்த அட்மிஷனை சரண்டர் செய்து விட வேண்டும். பிறகுதான் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர வேண்டும். அப்போதுதான் இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் கிடைக்கும். அப்போதுதான் வட்டி சலுகையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டம் அல்லாத நடைமுறையில் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற முயற்சிக்கலாம். இந்தக் கடனுக்கு மத்திய அரசின் வட்டி சலுகை கிடைக்காது.

11. விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு இந்தியப் பிரஜையாக இருக்க வேண்டியது அவசியம். வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். இந்த வங்கியில்தான் கல்விக் கடன் பெற முடியும் என்கிற விதி எதுவும் இல்லை. அந்த ஊரில் உள்ள எந்த வங்கியிலும் கல்விக் கடன் பெற அணுகலாம். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாக கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது. வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்டக் கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் வாங்கி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எஸ்டிமேட் தேவை. கல்விக்கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று நேரிலும் சமர்ப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையிலிருந்து பெற வேண்டும். ரேஷன் கார்டு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். உத்தரவாதம் கொடுக்க வேண்டியதிருந்தால் அதற்கான ஆவணங்களும் தேவைப்படும். வங்கிகளுக்கு நேரில் சென்று எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். வங்கிகளின் இணைய தளத்திலும் இதுகுறித்த விவரங்கள் உள்ளன.

12. எத்தனை நாள்களில் கிடைக்கும்?

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை வங்கிக் கிளைகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். கல்விக் கடன் கிடையாது என்று நிராகரிக்க அந்த வங்கிக் கிளை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கல்விக் கடன் கேட்டும் மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று எழுத்து மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் கொடுக்கப்படும் கல்விக் கடன் மனுவை நிராகரிக்க வங்கிகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. கல்விக் கடன் வழங்குவதற்கான இலக்கு முடிந்து விட்டது என்பது போன்ற காரணங்களை வங்கி அதிகாரிகள் கூறி வங்கிக் கடன் இல்லை என்று கூற முடியாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உரிய காலத்தில் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் நிவாரணம் பெறலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக் கடன் குறை தீர்ப்புக்குத் தனிப்பிரிவு உள்ளது. அங்கும் முறையிடலாம்.

13. இணையதளம்..

வித்யாலட்சுமி கல்வி கடன் போர்ட்டல் என்று அழைக்கப்படும் இணையதளம், உயர் கல்வித் துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) நிதிச் சேவைத் துறையுடன் இணைந்து செயல்படுகிறது. கல்விக் கடன் விண்ணப்பங்களை மாணவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இந்த போர்ட்டலை அணுகுவதன் மூலம் வங்கிகளுக்குப் விண்ணப்பிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். இந்த போர்ட்டல் தேசிய உதவித்தொகை போர்ட்டலுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் எளிதாக ஆன்லைன் வாயிலாக கல்விக் கடன் பெறும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள இணையதளம்தான் வித்யாலட்சுமி. இந்த இணைய தள சேவையை என்.எஸ்.டி.எல் (NSDL - National Security Depository Limited) நிறுவனம் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளது. கல்விக் கடன் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தனக்கென்று நிரந்தரக் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் மொபைல் எண், இ-மெயில் முகவரி, மாணவர் பெயர், தந்தை பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டால் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதில், தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருடப் படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவல் வரும். அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்தக் கிளை வங்கியின் வாயிலாக வழங்கப்படும் என்பது முடிவாகும். மேலும், கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை எனில், அது குறித்து அந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.