தேங்காய் பால் புலாவ்
ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் செய்து அசத்தக்கூடிய புலாவ் வகைகளில் ஒன்று, இந்த தேங்காய் பால் புலாவ்! காரசாரமான கிரேவியுடன் புலாவ் செய்து சாப்பிட்டால், வயிறு வேண்டாம் என்று சொன்னாலும், வாய் இன்னும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடும். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த தேங்காய்ப்பால் புலாவ் ரெசிபி எப்படி சுலபமான முறையில் நாமும் தயார் செய்ய போகிறோம்? என்னும் சமையல் குறிப்பு ரகசியத்தை இப்பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

Directions
1. தேங்காய் பால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள் :
தேங்காய் பால் – நான்கு டம்ளர்
பாஸ்மதி அரிசி – இரண்டு டம்ளர்
நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பிரியாணி பொருட்கள் – தலா ஒன்று (வாசனைக்கு)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10
பச்சை மிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – இரண்டு
புதினா இலை – இரண்டு கைப்பிடி
மல்லி இலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
2. தேங்காய் பால் புலாவ் செய்முறை விளக்கம் :
தேங்காய் பால் புலாவ் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை இரண்டு டம்ளர் அளவிற்கு எடுத்து அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். புதினா மற்றும் மல்லி இலைகளை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான்கு டம்ளர் அளவிற்கு பால் வருமாறு தேங்காயிலிருந்து பாலை மிக்ஸியில் அரைத்து எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் ஒன்றை வையுங்கள். அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு காய விடுங்கள். காய்ந்ததும் அதில் நீங்கள் விருப்பப்பட்டபடி பிரியாணி மசாலா பொருட்களை வாசனைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேவையான அளவிற்கு முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயத்துடன் காரத்திற்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
ஓரளவுக்கு வதங்கி வந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். இதன் பச்சை வாசம் நீங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து கொஞ்சம் போல் உப்பு போட்டு நன்கு மசிய வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மசிந்ததும் ரெண்டு கைப்பிடி அளவிற்கு புதினா இலைகள், ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழை சேர்த்து வதக்குங்கள். ரெண்டு நிமிடம் நன்கு எண்ணெயிலேயே வதக்குங்கள். பின்னர் நான்கு டம்ளர் அளவிற்கு தேங்காய் பால் சேர்த்து உப்பு போட்டு கலந்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி வையுங்கள். மூன்று விசில், உங்கள் குக்கரின் நிலைக்கு ஏற்ப விட்டெடுத்து பொல பொலவென்று சுடச்சுட பரிமாறினால் மணக்க மணக்க தேங்காய் பால் புலாவ் ரெடி! இந்த புலாவ் செய்யும் பொழுது, காரத்திற்கு பச்சை மிளகாய் தவிர எதுவும் சேர்ப்பதில்லை, எனவே சைட் டிஷ் சைவ அல்லது அசைவ கிரேவிக்கள் இருந்தால், அதன் காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

What's Your Reaction?






