அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயில் வாட்டி வதைக்க இது தான் காரணம்
அக்னி நட்சத்திரம் என்றாலே வெப்பம் அதிகரிக்கும் காலம் என்பது அனைவருக்கும் தெரியும். கோடை காலம் முழுவதிலுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். அதுவும் இந்த ஆண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாலும் சென்னை போன்ற இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இந்தாண்டு நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் (மே 04), கோடையில் வெப்பம் உச்சம் தொடுவதும், அந்த சமயத்தில் வெப்பத்தை தணிக்கும் விதமாக சற்று மழை பெய்வதும், மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதும் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. வெயில், மழை என இந்த சமயத்தில் வருவதற்கு முக்கியமான புராண கதை ஒன்ற சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இந்த 25 நாட்களில் மட்டும் அக்னி நட்சத்திர காலமாக குறிப்பிட்டு சொல்லப்படுவதற்கும் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் :
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சம் தொடும் காலத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் காலம் என சொல்வதுண்டு. அதாவது சூரிய பகவான் மேஷ ராசியில் பயணிக்கும் போது பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் துவங்கி, கிருத்திகை நட்சத்திரத்தை அடைவது வரையிலான 25 நாட்கள் வெயிலின் தாக்கல் அதிகரித்து காணப்படும். இந்த காலத்தையே அக்னி நட்சத்திர காலம் என குறிப்பிடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
25 நாட்கள் வெப்பம் தகிக்கும் :
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் அதிதேவதை அக்னி. சித்திரை மாத பிற்பகுதி மற்றும் வைகாசி மாத முதல் 2 வாரங்கள் சூரியன் மேஷம் மற்றும் ரிஷப ராசிகளில் பயணிக்கும் போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. ஜோதிடப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது சூரியன் உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படுகிறது. சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களின் பெயர்தான் அக்னி நட்சத்திரம் ஆகும்.
அக்னி நட்சத்திரம் கதை :
புராண கதைகளின் படி, முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி, தொடர்ந்து 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னிதேவனுக்கு மந்தநோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பை குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பை தின்றால் தான் தீரும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் அக்னி பகவான் காண்டவ வனத்தை தேர்ந்தெடுத்து, தனது நெருப்பு ஜூவாலையால் எரிக்க துவங்கினான். அந்த வனத்தில் வசித்த அரக்கர்களும், கொடிய விலங்குகளும், தாவரங்களும், சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னிதேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன் என வருணன் கூறினான்.
வெயில் வாட்டி வதைக்க காரணம் :
தான் வாக்களித்தபடி வருணன், பெரும் மழையை பெய்யச் செய்து, வன விலங்குகளை காத்தான். இதையறிந்த அக்னிதேவன் கிருஷ்ணரிடம் ஓடி, 'நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். இதனால் கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்தார். அர்ஜூனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான். அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியை தீர்த்துக் கொள்" என நிபந்தனை விதித்தார். அதன்படி அக்னிதேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர காலம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.
What's Your Reaction?






